Tuesday, March 1, 2011

47. புலவரைக் காத்த புலவர்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 44-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் உரையூருக்குச் சென்றான். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நெடுங்கிள்ளி, இளந்தத்தன் ஒருவொற்றன் என்று கருதி அவனைக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், இளந்ததத்தன் ஒற்றன் அல்லன் என்று நெடுங்கிள்ளிக்கு எடுத்துக் கூறி இளந்தத்தனைக் காப்பற்றினார். இப்பாடல் அச்சமயம் இயற்றப்பட்டது.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்தும் சுற்றம் அருத்தி
5 ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே, திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ்
10 மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. வள்ளியோர் = வரையாது கொடுப்போர்; படர்தல் = நினைத்தல். புள் = பறவை. 2. சுரம் = பாலைவழி. 3. வடியா = தெளிவில்லாத; வடித்தல் = தெளித்தெடுத்தல். 4. அருத்தல் = உண்பித்தல். 5. ஓம்புதல் = பாதுகாத்தல்; கூம்பல் = ஊக்கங்குறைதல். வீசுதல் = வரையாது கொடுத்தல். 6. வரிசை = சிறப்பு, மரியாதை, பாராட்டு; பரிசில் = கொடை, ஈகை. 7. திறம் = திறமை (அறிவு); திறப்படல் = கூறுபடல், தேறுதல், சீர்ப்படுதல்; நண்ணார் = பகைவர் (மாறுபட்ட கருத்துடைய மற்ற புலவர்கள்). 11. செம்மல் = தருக்கு (பெருமிதம்).

கொண்டு கூட்டு: பரிசில் வாழ்க்கை நும்மோர் அன்ன செம்மலும் உடைத்து; ஆதலால், நண்ணார் நாண இனிது ஒழுகின் அல்லது பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்று எனக் கூட்டுக.

உரை: வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து, பறவைகள் போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண்டும் என்று எண்ணி, அவற்றைப் பாதுகவாமல் உண்டு, பிறர்க்கும் குறையாது கொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வருந்துவதுதான் பரிசிலர் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதை அறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்யமாட்டர்கள். புலவர்கள், கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர்கள்.

சிறப்புக் குறிப்பு: கோவூர் கிழார் இளந்தத்தனைக் காப்பாற்றுவதற்காக நெடுங்கிள்ளியைச் சமாதானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், இப்பாடல் துணை வஞ்சித்துறையைச் சார்ந்ததாயிற்று.

No comments:

Post a Comment