Tuesday, March 1, 2011

49. யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?

பாடியவர்: பொய்கையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.
பாடலின் பின்னணி: சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலவளங்களெல்லாம் அடங்கியது. ஆகவே, அவன் நாடு எத்தகையது என்று எளிதில் கூற முடியாது என்ற கருத்தில் கோதையின் நாட்டைப் புலவர் பொய்கையார் இப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: புலவர் ஆற்றுப்படை. இயன்மொழியும் ஆகும்.
புலவர் ஆற்றுப்படை: புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.
இயன்மொழி: இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின் அயலது
5 இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே!

அருஞ்சொற்பொருள்:
1. நாடு = குறிஞ்சி நிலப்பகுதி; நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்; ஊர் = மருத நிலப்பகுதி. ஊரன் = மருதநிலத் தலைவன். 2. பாடு = ஓசை; இமிழ் = ஆரவாரம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன். 3.ஓங்கு = மேம்பட்ட; ஓங்குதல் = பெருமையுறல்; கோதை = சேரன். 4. புனவர் = குறிஞ்சி நில மக்கள். தட்டை = கிளி ஓட்டுங்கருவி. 5. இறங்கு கதிர் = வளைந்த கதிர்; அலமருதல் = சுழல். 6. பிறங்குதல் = ஒலித்தல், மிகுதி; சேர்ப்பு = கடற்கரை.

கொண்டு கூட்டு: புனவர் தட்டை புடைப்பின் கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழும்; ஆதலால், கோதையை யாங்கன் மொழிகோ எனக் கூட்டுக.

உரை: தினைப்புனங்காப்போர் தட்டை என்னும் பறையை அடித்துத் ஒலி எழுப்பினால், அப்புனத்திற்கு அருகே, வளைந்த கதிர்களையுடைய வயல்களிலிலும், நீர் மிகுந்த கடற்கரையிலும் உள்ள பறவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எழுகின்றனவே. சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி நிலமுடையதால் அவனை நாடன் (குறிஞ்சி நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு மருத நிலமுடையதால் அவனை ஊரன் (மருத நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு ஒலிமிகுந்த குளிர்ந்த கடலை உடையதால் அவனைச் சேர்ப்பன் (நெய்தல் நிலத் தலைவன்) என்பேனா? உயர்ந்த வாளையுடைய கோதையை எப்படிக் கூறுவேன்?

சிறப்புக் குறிப்பு: தினைப்புனங்கள் குறிஞ்சி நிலத்திலும், வயல்கள் மருத நிலத்திலும், கடல் சார்ந்த நிலம் நெய்தலிலும் உள்ளவை ஆகையால் கோக்கோதையின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலவளங்களும் உடையது என்று புலவர் பொய்கையார் கூறுவது இப்பாடலிலிருந்து தெரிகிறது. புனவர் தட்டை புடைத்தல் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் நிகழ்வதாகையால், நாடன் என்பது குறிஞ்சி மற்றும் முல்லை நிலத் தலைவனையும் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். ஆகவே, கோக்கோதையின் நாடு குறிஞ்சி, முல்லை, மருதம் மற்ரும் நெய்தல் ஆகிய நானில வளமும் உடையது என்ற கருத்தில் புலவர் பொய்கையார் இப்பாடலில் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

இப்பாடலில் புலவர் ஒருவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை. கோக்கோதையின் இயல்பைப் புகழ்ந்ததால், இப்பாடல் இயன்மொழித் துறையைச் சார்ந்ததாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment